'கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், கஜா புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள், வழக்கம் போல நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.
அப்பகுதி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும்.புயலில் பாட புத்தகங்களை இழந்த, 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கஜா புயலால் முழுமையாக பாதித்த மாணவர்களுக்கு என்ன நிவாரண வழங்கலாம் என, முதல்வரிடம் ஆலோசித்து, நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.