வண்ணாரப்பேட்டையில் உள்ள, மாநகராட்சி பள்ளியில், போக்குவரத்து போலீசார் துாய்மைப் பணியில் ஈடுபட்டதை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர், பகலவன், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆணையர், அமுல்ராஜ் ஆகியோர் உத்தரவின்படி, மாநகராட்சி பள்ளி, அங்கன்வாடி மையங்களை துாய்மைப்படுத்தும் பணியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர், கணேஷ் பாபு தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார், வண்ணாரப்பேட்டை, படவட்டம்மன் சாலையில் உள்ள, சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை, நேற்று முன்தினம் துாய்மைப்படுத்தினர்.பள்ளி, விரைவில் திறக்க உள்ளதால், துாய்மை பணியில் ஈடுபட்டதாக, அவர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.