அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மா ர்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
அத்துடன் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் மே மாத கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்கள் விடுமுறையில் இருக்கின்றனர். இ ருப்பினும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் பல ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், தமிழகத்தில் இதுவரை 30 ஆசிரியர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு ஊசி போட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆசிரியர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும். தடுப்பு ஊசி போட்டவர்களுக்காக வழங்கப்படும் சான்றை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவற்றின் நகல்களை பெறும் அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு உரிய காரணத்தை ஆதாரங்களுடன் பெற்று அறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment