கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. இதேபோல, தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது சென்னைக்கு அருகே வந்து பின் அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தான் தான் கடந்த சில நாட்களாக சென்னையில் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே வர உள்ளது. அதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது, இன்னும் சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டம், உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, 21(இன்றும்), 22(நாளையும்) ஆகிய தேதிகளில் திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இதனைதொடர்ந்து, மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவாகி வருகிறது இது வரும் 23 ஆம் தேதி இரவு சென்னைக்கு கீழே வருகிறது. இதனால் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.