அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் துவக்கம் - Asiriyar.Net

Thursday, June 13, 2019

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் துவக்கம்



அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மொத்தம் 45 ஆயிரம் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகள் மட்டும் 35 ஆயிரம் உள்ளன. மொத்தம் உள்ள பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், என சுமார் 2 லட்்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மட்டும் அதிக அளவில் ஆசிரியர்கள் பணியாற்றுவதாக பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. ஒரு பள்ளியில் ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் அல்லது மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதியின்படி அல்லாமல் கூடுதலாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில மாவட்டங்களில், உரிய பாட ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் படிக்கவே சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தேர்ச்சி வீதம் குறைவதாக பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்துள்ளது. 

இதையடுத்து, மாவட்ட வாரியாக எடுத்த கணக்கெடுப்பின்படி, சில மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே சில மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடையில் தேர்தல் வந்ததால் அந்த பணி பாதியில் நின்றது. 

இப்போது, மீண்டும் பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி விரைவில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின் படி சீனியாரிட்டி, மற்றும் கூடுதல்  தகுதிகள், பதவி உயர்வுக்கு தகுதி, ஓய்வு பெற உள்ளவர்கள் என ஆய்வு செய்யப்பட்டு பணி நிரவல் செய்யப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad