70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 13, 2019

70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்




யுனெஸ்கோ அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குநர் எரிக் ஃளாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். 
தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு பாலியல் கல்வி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை, யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து தயாரித்த புத்தக வெளியீட்டு நிகழ்வு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு 
நினைவு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். நாளை மறுநாள் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்த வாரத்தில் ஒருமுறை பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறும்.
தனியார் பள்ளிகளை விட பாடத்திட்டத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அனைத்து விதமான மாற்றங்களையும் செய்து வருகிறோம். 
போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றாற்போல பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளோம். சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் 2 லட்சம் மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், ஒற்றுமை, மாணவிகளின் பாதுகாப்பு போன்ற மாணவர்கள் நலன் சார்ந்த நற்பழக்கங்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் 

அரசுப் பள்ளிகளில் விளையாட்டைக் கட்டாயமாக்கவும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் விளையாட்டுத் துறையில் தற்போது கூடுதலாக இரண்டு உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறோம். விளையாட்டை மேம்படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணங்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க முடியும். 
நீட் தேர்வு: நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான், தமிழ்நாட்டின் நிலைப்பாடு. 
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த, 2 ஆயிரத்து 583 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

Post Top Ad