அரசு பள்ளிகளில் ஜல்மணி திட்டம் முடக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 30, 2019

அரசு பள்ளிகளில் ஜல்மணி திட்டம் முடக்கம்



பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அரசு பள்ளிகளில் மத்திய அரசின் ஜல்மணி திட்டம் முடங்கியது. இதனால் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நோய் மற்றும் நீரில் கரைந்த புளோரைடு வேதிப்பொருள் பாதிப்பை தடுக்க மத்திய அரசு, கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளிகளில் ஜல்மணி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம்  நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 200 கோடியில் செயல்படுத்தப்பட்டது.


தமிழகத்தில் முதற்கட்டமாக சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 40 ஆயிரத்தில் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டன.இந்த கருவிகளில் அல்ட்ரா பில்ட்ரேஷன், அயன் எக்ஸ்சேஞ்ச், எலக்ட்ரோ டயாசீல், ரிவர்ஸ் ஆஸ்மாசீஸ், மெம்பரின் பில்ட்ரேஷன், மைக்ரோ பயாலஜிகல்டிஸ் ஆகிய 6 தொழில்நுட்பங்கள் மூலம் சுத்திகரித்த நீர் பெறப்பட்டன. 

இதன் மூலம் நோய், புளோரைடு பாதிப்பு தடுக்கப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடு இல்லாததால் பராமரிப்பின்றி கருவிகள் பழுதடைந்தன. பல பள்ளிகளில் கருவிகள் இருந்த சுவடே இல்லை. இந்த திட்டம் முடங்கியதால் மீண்டும் சுத்திகரிக்கப்படாத குடிநீரே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘சுத்திகரிப்பு கருவிகள் பொருத்திய சில மாதங்களிலேயே பழுதடைந்தன. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பராமரிப்பு நிதியும் ஒதுக்கவில்லை’ என்றனர்.

Post Top Ad