பள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்!!நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வியாளர்கள் வலியுறுத்தல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 25, 2019

பள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்!!நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வியாளர்கள் வலியுறுத்தல்!



பள்ளிகளுக்கு செல்போன் கொண்டுவருவதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிப்படைவதாக கல்வி ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டிராய் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்,  தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

2013ம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கு மாணவர்களும் செல்போன் கொண்டு வருவதாக புகார்கள் எழுந்தது. எனவே, மாணவர்கள் செல்போன் கொண்டு வர தமிழக  கல்வித்துறை சார்பில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவது குறைந்தபாடில்லை.இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், ‘சிறந்த கல்வியில்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சிலர் செல்போன் பயன்படுத்துவதில் மூழ்கி கிடக்கின்றனர். 


செல்போனில் நல்ல தகவல்களும்  இருக்கிறது. ஆனால், இன்டர்நெட் பயன்படுத்தும்போது இடையில் வரும் ஆபாச படங்களுக்கான விளம்பரங்கள் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பிவிடுகிறது. எனவே, இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றனர்.

கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பலமுறை  கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆசிரியர்களும் வகுப்பு நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சிலரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோரை  அழைத்து ஒப்படைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதில் ஒரு சில பெற்றோர், மாணவர்களிடம் எப்படி செல்போன் வந்தது என்பதே தெரியவில்லை என்கின்றனர். ஒரு சிலர் நாங்கள்தான் பாதுகாப்புக்காக செல்போன் கொடுத்து அனுப்பினோம் என்று ஒப்புதல் அளிக்கின்றனர்.  மாணவர்கள் பெரும்பாலான நேரங்களில் பள்ளிகளில்தான் இருக்கின்றனர். ஆனால், மாணவர்களை கண்காணிக்க வேண்டிய கடமை பெற்றோருக்குதான் அதிகம் என்பதை ஒரு சிலர் மறந்துவிடுகின்றனர். எனவே, மாணவர்களை  கண்காணிக்க வேண்டியது மட்டுமல்ல, செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை கையாளுவது பெற்றோரின் கடமை என்பதையும் உணர வேண்டும்’ என்று அவர்கள் கூறினர்.


பைக்கில் சீறிப்பாய்கின்றனர்
‘இளம் கன்று பயம் அறியாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பள்ளி மாணவர்கள் ஒரே பைக்கில் 3 அல்லது 4 பேர் கூட அதிவேகமாக சீறிப்பாய்ந்து செல்கின்றனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘18  வயதுக்கு உட்பட்டவர்களிடம் பைக் கொடுக்க கூடாது. மேலும் மாணவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பும் பெற்றோருக்கு 3 மாத சிறை அல்லது ₹1000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதேபோல், விபத்து  ஏற்பட்டால் பெற்றோர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்’ என்றனர்.

ஆபாச படங்களால் விபரீதம்
சமீபத்தில் தனியார் அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களில், இந்தியாவில் 71 சதவீதம் கல்லூரி மாணவர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் சராசரி  வயது 9 ஆக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக போதை பொருட்களுக்கும் மாணவர்கள் அடிமையாகிவிடுவதாக அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியது. ஆபாச இணையதளங்களை முடக்கும்படி தொடரப்பட்ட வழக்கில்,  ஆபாச இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 800க்கும் அதிகமான ஆபாச இணையதளங்களை முடக்கி மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை  மேற்கொண்டது. ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் ஆபாச பட இணைய தளங்கள் செயல்பட தொடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, பலமுறை ஆபாச பட இணையதளங்கள் முடக்கப்பட்டு மீண்டும் செயல்பட  தொடங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபாச பட இணையதளங்களை சம்பந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Post Top Ad