பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். எம்.ஜி. ஆர். ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.
சமீப காலமாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை உணவாக மாணவ- மாணவிகளுக்கு தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும். இதற்காக சிறந்த சமையல்காரர்களை கூடுதலாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.