மொபைல் அடிமைத்தனத்தால் ஏற்பட்ட விபரீதம்! - Asiriyar.Net

Wednesday, October 24, 2018

மொபைல் அடிமைத்தனத்தால் ஏற்பட்ட விபரீதம்!





ஒரு வாரமாக ஓய்வின்றி தொடர்ந்து ஸ்மார்ட்போன் உபயோகித்து வந்த பெண்மணி, திடீரென விரல்களை மடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவசர நேரங்களில் மொபைல்போன்கள் உதவிகரமாக இருந்தாலும் அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது சீனாவில் நடந்துள்ளது.

ஷாங்காயிஸ்ட் (சீன ஊடகம்) ஊடகத்தில் வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்மணி சீனாவின் சங்ஷா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு கூடச் செல்லாமல் தொடர்ந்து ஸ்மார்ட்போனிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் ஸ்மார்ட்போனைக் கையில் பிடித்தவாறு உலாவியுள்ளார்.



தொடர்ந்து ஒரு வாரம் இப்படிச் செய்து வந்ததால் அவருக்கு வலதுகையில் வலி ஏற்பட்டு, ஸ்மார்ட்போனை கையில் ஏந்திய நிலையில் திடீரென கைவிரல்கள் வேலை செய்யாமல் போனது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 'டெனோசினோவிடிஸ்' என்ற நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அந்தப் பெண்மணிக்கு உரிய சிகிச்சைகளை வழங்கி மீண்டும் விரல்களை பழையபடி அசைவுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கினர்.

சீனாவில் மட்டுமல்ல; நம்மூரிலும் இதேபோல ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து மூழ்கிவிடாமல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கலாம்.

Post Top Ad