பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3 மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டாம்,' என, மதுரை கல்வித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.'தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள், நோட்டுக்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்' என கல்வித்துறை உத்தரவிட்டது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு புத்தகங்கள், நோட்டுக்கள் வினியோகிக்கும் நடவடிக்கை நடக்கிறது. மதுரையில் மாவட்ட கல்வி அலுவலரால் சுற்றறிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டள்ளது. அதில், '3.6.2019ல் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டாம். அன்று 'ரெபெரஸ்மென்ட் அன்ட் பிரிட்ஜ் கோர்ஸ்' நடத்த வேண்டும்.
நடத்தியதற்கான ஆதாரங்களை (போட்டோக்களை) மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மாலை 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும். ஜூன் 4 பிற்பகல் புத்தகம் வழங்க வேண்டும்' என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க பள்ளிகளுக்கு ஒன்று, இரண்டு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டுமே அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. மூன்று, ஐந்தாம் வகுப்புகளுக்கு வழங்கவில்லை.
ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு 3ம் தொகுதி, நான்காம் வகுப்பிற்கு 2ம் தொகுதி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பதிவியியல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பிற்கு கணிதம் தவிர மற்ற புத்தகங்கள், பத்தாம் வகுப்பிற்கு தமிழ் மீடியம் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்த புத்தகங்கள் அச்சில் உள்ளன, விரைவில் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் மதுரையில் வழங்க கூடாது என்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்றனர்