இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், ஊர் பெரியவர்கள், இந்தியன் உடல் நல உதவி மற்றும் நடைபயிற்சி அமைப்பு சார்பில் காலை உணவு திட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் துவக்கப்பட்டது.இதையொட்டி, திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.பி., கிருஷ்ணன் தலைமை வகித்தார். கண்ணன், குமாரசாமி, பாபு, ஆடிட்டர் ராமசாமி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை கண்ணன் துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், ''மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் நினைவு நாளில், குழந்தைகளுக்கு காலையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து வேலை நாட்களிலும் காலை நேரத்தில், முட்டை, பால், இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பரவ வேண்டும். இத்திட்டத்துக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்,'' என்றார்.