கை கழுவக் கூடாது; டாய்லெட்டை பயன்படுத்தக் கூடாது!'- மாணவர்களுக்கு தனியார் பள்ளி கட்டுப்பாடு - Asiriyar.Net

Tuesday, June 18, 2019

கை கழுவக் கூடாது; டாய்லெட்டை பயன்படுத்தக் கூடாது!'- மாணவர்களுக்கு தனியார் பள்ளி கட்டுப்பாடு



தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் பிரச்னை காரணமாகப் பள்ளிக்கூட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைக் கடும் வறட்சி வாட்டிவருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீரைக் குடிநீர் வாரியம் விநியோகித்துவந்தது. செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட நான்கு நீர்த் தேக்கங்களும் வறண்டுவிட்டதால், தற்போது 52 கோடி லிட்டர் தண்ணீரை மட்டுமே குடிநீர் வாரியம் விநியோகம் செய்கிறது. பல இடங்களில் சாக்கடை கலந்த தண்ணீர்தான் வருகிறது.

சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், தண்ணீர் லாரிகளை எதிர்நோக்கி நள்ளிரவு நேரத்திலும் மக்கள் வீதிகளில் காத்திருக்கிறார்கள்

குடிநீர் கேன்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடுகின்றனர்.

தண்ணீர் இல்லாத காரணத்தால், சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், ``ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கைகழுவக் கூடாது. கழுவுவதற்குத் தண்ணீர் இல்லை. எனவே, மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக ஸ்பூன் கொண்டுவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக இரண்டு பாட்டில்களில் தண்ணீர் கொண்டுவர வேண்டும். கழிப்பறைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது" என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Post Top Ad