பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.19 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 16, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.19



திருக்குறள்


அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

விளக்கம்:

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பழமொழி

The child is the father of man

விளையும் பயிர் முளையிலே தெரியும்

இரண்டொழுக்க பண்புகள்

 1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உலகில் உணவு  இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி

ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

- காந்தியடிகள்

பொது அறிவு

1. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?

 காட்வின் ஆஸ்டின்

2. இந்தியாவில் மிக உயர்ந்த சிலை எது?

   சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை குஜராத்.


மெழுகு பூசிய ஆப்பிளின் தீமைகள்




1. பழங்களின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் ஆப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது. இதனால் செயற்கை முறையில் பழங்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்காக, ஆப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது.

2. அதாவது ராட்சத தொட்டியில், இளஞ்சூட்டுடன் கூடிய மெழுகு கலவையில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்படுகின்றன. சிறிது நேரத்தில் அந்த பழங்களை எடுத்து துணியால் துடைத்து, அதனை அட்டை பெட்டிகளில் அழகாக அடுக்கி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பழங்கள், 15 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

3. ஆப்பிள் பழங்களின் தோல் பகுதியை நகங்களால் சுரண்டி பார்த்தால் மெழுகு துகள்கள் ஒட்டியிருப்பது தெரியவரும். வயிறுக்குள் செல்லும் மெழுகு, நமக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்து சேர்க்கிறது.

4. குறிப்பாக செரிமானக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், குடல் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. இது, மெல்ல கொல்லும் விஷம் போன்றது என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

English words and Meaning

Firewood.  விறகு கட்டை
Jumble. குழப்பம்,கலக்கு
Lapse.        தவறு,
Nourish.      உணவூட்டு
Plural.       பன்மை, ஒன்றுக்கு மேற்பட்ட

அறிவியல் விந்தைகள்

அமிலங்கள்
*இவை புளிப்பு சுவையுடையவை
*நம் உணவில் அநேக அமிலங்கள் உண்டு.
*எலுமிச்சை சிட்ரிக், பால் லாக்டிக் அமிலம் போன்றவை.
* நம் குடலில் செரிமானத்திற்காக ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது.
*கரிம அமிலமான அசிட்டிக் அமிலம் வினீகர் என்றும் அழைக்கப்படுகிறது
*நாம் குடிக்கும் குளிர் பானங்கள் அதிக அளவு அமிலத் தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது.


Some important  abbreviations for students

* IGNOU    -   Indira Gandhi National Open University

* IFS    -  Indian Foreign Service;     Indian Forest Service

நீதிக்கதை

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.


“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.


இன்றைய செய்திகள் - 16.03.2019

* உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமார் 80 நாடுகளில், பள்ளி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* மார்ச் 21ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

* மார்ச் 17ம் தேதி ஐஎஸ்எல் கால்பந்து பைனலில் பெங்களூரு - கோவா மோதல்.

* இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் கெர்பர்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸 School students involved in protest yesterday in about 80 countries, urging action to prevent the effects of climatic  changes

 🌸In Tamil Nadu, the temperature will increase from 2 to 3 degrees Celsius : Chennai Meteorological Information Center announced

🌸 On March 21, the central government has granted permission to start production of green crackers

🌸 Bangalore-Goa clash in ISL football match on March 17

🌸 Indian Wells tennis: kerper advanced to  semi-finals by winning Venus Williams

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம.

Post Top Ad