Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, April 27, 2025

"ஆசிரியர்களுக்கு..." - சட்டப் பேரவையில் அன்பில் மகேஷ் உருக்கமான பேச்சு

 



அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களை பற்றி பேசினால், பெற்ற பிள்ளையை தூக்கி கொஞ்சும்போதும், நெஞ்சில் எட்டி உதைத்தால், தூக்கி போட்டுவிடமாட்டோம்; நம் பிள்ளையை நாம்தான் அரவணைத்துக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் அவர்கள் விமர்சனம் செய்தாலும் சரி, எங்களுடைய ஆசிரியர்களுக்கும், எங்களுடைய அரசு ஊழியர்களுக்கும் நாங்கள் செய்யாமல் வேறு யார் செய்யப்போகிறார்கள்? இந்த நம்பிக்கை இன்றைக்கும் அவர்களுக்கு இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,நேற்று (ஏப்ரல்24) பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.


உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அன்பில் மகேஷ், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது என்றும், ரூ.2 ஆயிரத்து 500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்றும் கூறினார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை என்று கூறிய அன்பில் மகேஷ், பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்றார்.


தொடர்ந்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலுரை நிகழ்த்தியபோது, அரசு ஊழியர்கள் பற்றி பேசுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் பற்றி சிலர், அவர்களுடைய பலம் தெரியாமல் பேசிவிடுகிறார்கள். எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கேடு வந்தது? எதற்காக இவற்றையெல்லாம் செய்கிறார்கள்? என்று மற்றவர்கள் சொல்லும்போது வேதனையாக இருக்கிறது. அப்படி மிகவும் எளிதாகப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். அவர்கள் ஒரு சமூகத்தினுடைய பலம். அவர்களுக்காக குடும்ப பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தது கலைஞர்.


அன்றைக்கு நிதிநிலை எப்படி இருந்தது? 9.69 சதவீதத்தில் இன்றைக்கு மிகப் பெரிய உயரத்தை எட்டியிருக்கிறோமே. இந்த அளவுக்குக் கொண்டு வந்திருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அன்றைக்கு முக கவசமும், மு.க.வம்சம் தான் நம்முடைய உயிரை காப்பாற்றியது என்று பொது மக்கள் கூறினர். பணம் நிறைய இருந்தால் அதை வாரி வழங்கக்கூடிய வள்ளல் அவர்.


அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களை பற்றி பேசினால், பெற்ற பிள்ளையை தூக்கி கொஞ்சும்போதும், நெஞ்சில் எட்டி உதைத்தால், தூக்கி போட்டுவிடமாட்டோம்; நம் பிள்ளையை நாம்தான் அரவணைத்துக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் அவர்கள் விமர்சனம் செய்தாலும் சரி, எங்களுடைய ஆசிரியர்களுக்கும், எங்களுடைய அரசு ஊழியர்களுக்கும் நாங்கள் செய்யாமல் வேறு யார் செய்யப்போகிறார்கள்? இந்த நம்பிக்கை இன்றைக்கும் அவர்களுக்கு இருக்கிறது" என்று பேசினார்.


No comments:

Post a Comment

LightBlog