தேசிய அளவில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்காக ஜூலை 4, 5 ல் சிறப்பு 'டெட்' தேர்வு நடந்தது. இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், 'டெட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் ஆக.,24 ல் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இது ஆசிரியர்களிடையே ஆதரவையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'டெட்' தேர்வு விலக்கு தீர்மானத்தால் தீர்வு ஏற்படாது. இது ஆசிரியர்களை ஏமாற்றும் வேலை.
'டெட்' கட்டாயம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு. நீட் தேர்வுக்கும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தேர்வு தொடர்கிறது.
சிறப்பு 'டெட்' தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வது அந்தந்த மாநில அரசின் கொள்கை முடிவு. 'டெட்' தேர்வு விவகாரத்தில் சிறப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயம் செய்யும் முடிவு தான் சிறந்தது என்றனர்.
மானியக் கோரிக்கையில் ஏமாற்றம்
கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லை. துறை இயக்குநர் பதவி ஒரு மாதமாக காலியாக உள்ளது. இதுதவிர 32 கல்வி மாவட்ட அலுவலர்கள், ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதை நிரப்ப நடவடிக்கை இல்லை. சமவேலைக்கு சமஊதியம் என்ற இடைநிலை ஆசிரியருக்கு நிலவும் சம்பள முரண்பாடு, பகுதிநேர ஆசிரியரின் பணி நிரந்தரம் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வும் இல்லாதது ஏமாற்றம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



No comments:
Post a Comment