தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பள்ளிகளில் வழக்கமான கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் பரபரப்பான புகாரை எழுப்பியுள்ளனர்.
80 சதவீத ஆசிரியர்களுக்கு பணி!
இதுகுறித்து கோவை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
"பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களில் சுமார் 80 சதவீதம் பேர் கணக்கெடுப்பு மற்றும் அதைச் சார்ந்த களப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்களை நடத்தி முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது."குறிப்பாக, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை இதுபோன்ற பிற பணிகளில் ஈடுபடுத்துவது, மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சியைப் பாதிக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்லூரி ஆசிரியர்களும் கொந்தளிப்புபள்ளி ஆசிரியர்கள் மட்டுமன்றி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களும் இத்தகைய கண்காணிப்பாளர் பணிகளுக்கு அதிகளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கிழக்கு மண்டலத்தில் குறிப்பிட்ட ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மட்டும் 63 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் கணக்கெடுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இவ்வளவு பேராசிரியர்களை கணக்கெடுப்பு பணிக்கு அனுப்பினால், கல்லூரிகளில் வழக்கமான வகுப்புகளை எவ்வாறு நடத்துவது?" என கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கல்வி அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள
முக்கிய கோரிக்கைகள்:
பொதுத்தேர்வு விலக்கு: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு பணிகளில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.
மாற்று ஏற்பாடு: பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் மாற்றுப் பணியாளர்களை அல்லது குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மட்டும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் நிரப்பல்: பள்ளிகளில் உள்ள காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பி, ஆசிரியர்கள் மீதான பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன், கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் (CEO) மனு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment