தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் – தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப் பள்ளிகள், அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (Genuineness of Educational Certificate) அறிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களையும் உரிய கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களிடம் அனுப்பி, அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்த பின்னர் தகுதிக்காண் பருவம் முடியும் நாளிலேயே அனைத்து பணியாளர்களும் பணியில் சேரும் போது சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிபுரிந்து வரும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தங்களிடம் உள்ள கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உரிய காலத்திற்குள் அவற்றை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நாள் வரை சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பணியாற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியும் நடவடிக்கையை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியான நடவடிக்கையை துணை இயக்குநர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment