Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, September 18, 2026

அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதை தடுக்க வேண்டும்




தமிழகத்தில் 14,829 அரசு பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். அந்த பள்ளிகளின் மூடுவிழாவை தடுக்க மனித வளம், கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30 க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர்.

30க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதை தவிர வேறு வழியில்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LightBlog