திருப்பூர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து, பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர், அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல், 54. அவர், நேற்று தன் அறையில் அமர்ந்து, பள்ளிக்கு தொடர்ந்து வராமல், நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம், 'ஏன் இவ்வளவு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை?' என கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரது அறைக்குள் புகுந்த பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர், தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
சத்தம் கேட்டு அருகில் வகுப்பறையில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஓடி வந்ததும், மாணவர்கள் அங்கிருந்து தப்பினர்.
தாக்குதலில் காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு, கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் வழிந்ததால், அவரது சட்டையும் ரத்தத்தில் நனைந்திருந்தது.
மாலை வரை மருத்துவமனையில் இருந்த தலைமை ஆசிரியர், பின்னர் சிகிச்சை முடிந்து பள்ளிக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சக ஆசிரியர் தகவலில் பள்ளிக்கு வந்த போலீசார், பிளஸ் 2 மாணவர்கள் சிலரை, தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். 'சி.சி.டி.வி' கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான நடத்தை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்த மாணவர்கள் மீது தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


No comments:
Post a Comment