மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடாத பள்ளி தலைமை ஆசிரியைக்கு, அன்னூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்னூர் தாசில்தார் ஜெயபாரதி, முடுக்கன் துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அரசு ஊழியர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது சட்டபூர்வ கடமையாகும். இச்சட்டத்தின் கீழ் பணி செய்ய மறுப்பது தண்டனைக்கு உரியதாகும். இதற்கு அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
தாங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்ள தகவல் தரப்பட்டது. ஆனால் பணி நியமன ஆணையை பெறவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை. இவ்வறிவிப்பு கிடைத்தவுடன் உரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி செந்தில் குமார் கூறுகையில், ஆசிரியை கடும் உடல் நல பாதிப்பால் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். தலைமை ஆசிரியர்கள், மேற்பார்வையாளராகத்தான் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் இவர் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி துவங்கும் முன் பணி நியமனம் செய்யவில்லை. உடல் நலம் பாதிப்புள்ள ஆசிரியர்களை இப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment