ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலருக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலையில் ஜூன் 10ஆம் தேதி நிதித்துறைச் செயலருடன் ஆலோசனைக் கூட்டம் உள்ள நிலையில் இன்று மாவட கல்வி அலுவலகங்களில் இது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
பணி ஓய்வு பெற்ற தமிழக பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் ஓய்வூதிய விவிகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலகங்களில் இன்று (ஜூன் 7) ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசுத் துறைகளில் அதிகரிக்கும் காலி பணியிடங்கள்
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதற்கேற்ப காலி பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. உருவாகும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்து 42 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள்!
அரசுத் துறைகளிலும், பள்ளிகளிலும் சுமார் 4.5 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசு இயந்திரத்தின் வேகம் குறையும். பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. அவுட் சோர்ஸிங் முறையில் குறைவான ஊதியத்தில் தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுவதால் சமூக நீதி மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.
ஒரே நாளில் அதிகமானோர் ஓய்வு!
தமிழ்நாட்டில் கடந்த சனிக் கிழமை (மே 31 ) 8144 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகமானோர் ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் கல்வி ஆண்டு நிறைவடையும் என்பதால் அதிக ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது இந்த மாதங்களில் தான்.
அரசு ஊழியர்களின் கோரிக்கை!
அரசு ஊழியர்களின் ஓய்வு காரணமாக உருவாகும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஒரு புறம் என்றால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அரசு அதிகாரிகள் நடத்தும் ஆலோசனை!
ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் தலைமையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஓய்வூதிய பலன்களை விரைந்து முடிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 7) நடைபெறுகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்!
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வழங்கியுள்ளார்.
அதில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே வரை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள விவரங்களின் தற்போதைய நிலையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரிய இந்த பட்டியலை தொகுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு!
ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பணி மாறுதலுக்கான இணைய வழி பொது கலந்தாய்வு ஜூன் 12 மற்றும் ஜூன் 13 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment