பெண்களுக்காக தமிழக அரசின் நலத் திட்டங்கள் இத்தனையா?- முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 8, 2023

பெண்களுக்காக தமிழக அரசின் நலத் திட்டங்கள் இத்தனையா?- முழு விவரம்

 




''மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா'' என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 


சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த நிலையில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்


பெண் கல்வி, பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்துதல், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் சிறிய குடும்பக் கொள்கை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் உள்ள ஏழைக் குடும்பத்தினர் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. 


01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்த பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவர்கள். இதன்மூலம் ஒரு பெண் குழந்தை கொண்ட குடும்பத்துக்கு பெண் குழந்தையின் பேரில் ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். 


இந்தத் தொகை, முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை வழங்கப்படும்.


2 பெண் குழந்தைகள் என்றால் தலா ரூ.25 ஆயிரம் செலுத்தப்படும். அதற்கான ரசீது குடும்பத்திடம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேல் பெண்ணின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 40 வயதுக்குள் பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். 


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்)


இந்தத் திட்டம்  முதலில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில்செயல்பட்டு வந்தது. இதன் கீழ் படித்த பெண்களுக்கு தாலிக்குத் தங்கமும் ரூ.50 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வந்தது.


பின்னாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு, மாணவிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமாக, புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் மாற்றப்பட்டது. பெண் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 


டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம் (Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Assistance Scheme)


கணவனை இழந்த பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களின் மறு மணத்துக்காக, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


இதன் கீழ் 2 திட்டங்கள் செயல்படுகின்றன. கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.50 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இன்னொரு திட்டத்தில் படிப்பு தகுதியாகக் கொள்ளப்படாத பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.250 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. 20 முதல் 40 வயது வரையிலான மறுமணம் செய்துகொள்ளும் பெண்கள் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவர்கள். 


கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் (Free Bus Scheme)


பெண்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்ட, அதிகம் வரவேற்பைப் பெற்ற திட்டங்களில் முக்கியமானது கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம். உழைக்கும் ஏழை மகளிருக்கு இந்தத் திட்டம் அதிக பலனை அளித்து வருகிறது. ஒரு பெண் பயணி மாதத்தில் சராசரியாக 50 முறை பயணித்து, ரூ.858 சேமித்துள்ளனர். 


மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவது, குழந்தைகளின் தேவை உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் சேமிப்பைப் பயன்படுத்துவதாக பெரும்பாலான பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 236 கோடி முறை, மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 


பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை திருமண உதவித் திட்டம் (E.V.R.Maniammaiyar Ninaivu Marriage Assistance Scheme for Daughter’s of Poor Widows)


ஏழை கைம்பெண்களின் மகளுக்குத் திருமணம் செய்ய உதவும் வகையில், பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவி, திருமணச் செலவுக்காக மணப் பெண்ணின் தாய்க்கு வழங்கப்படுகிறது. 


இதன் கீழ் 2 திட்டங்கள் செயல்படுகின்றன. கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.50 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இன்னொரு திட்டத்தில் படிப்பு தகுதியாகக் கொள்ளப்படாத பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.250 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. . 


அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் (Annai Teresa Ninaivu Marriage Assistance Scheme for Orphan girls)


ஆதரவற்ற பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ் கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.50 ஆயிரம் பணமும் (தேசிய சேமிப்புப் பத்திரம் + காசோலை) வழங்கப்பட்டு வருகிறது. இன்னொரு திட்டத்தில் படிப்பு தகுதியாகக் கொள்ளப்படாத பெண்களின் திருமண தாலிக்கு 1 பவுன் தங்கமும் ரூ.250 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. திருமணமாகும் பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். 2016 முதல் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. 


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் (Dr.Muthulakshmi Reddy Ninaivu Inter-caste Marriage Assistance Scheme)


சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக தமிழ்நாடு அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


திருமணம் செய்து கொள்ளும் இணையில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு எதுவுமில்லை. உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். இதில் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10,000 காசோலையாகவும் வழங்கப்படும்.


சத்தியவாணி முத்து அம்மையார்‌ நினைவு இலவச தையல்‌ இயந்திரம்‌ வழங்கும்‌ திட்டம்‌ (Sathiyavanimuthu Ammaiyar Ninaivu Free Supply of Sewing Machine Scheme)


சமுதாயத்தில்‌ நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற விதவைகள்‌, கணவரால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்‌ சுய தொழில்‌ செய்து தங்கள்‌ வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ இலவசமாக தையல்‌ இயந்திரம்‌ வழங்குதல்‌ திட்டம்‌ 1979-1980-ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது.


தையல்‌ வேலை தெரிந்த, 20 முதல்‌ 40 வயது வரையிலுள்ள, ஆதரவற்ற கைம்பெண்கள்‌, சமூக மற்றும்‌ பொருளாதார ரீதியில்‌ நலிவுற்ற பெண்கள்‌, கணவரால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, மாற்றுத்திறனாளி ஆண்‌ மற்றும்‌ பெண், ‌ முகாம்‌ வாழ்‌ இலங்கை தமிழர்கள்‌ ஆகியோருக்கு தையல்‌ இயந்திரம்‌ வழங்கப்படுகிறது. 


அரசு சேவை இல்லங்கள் (Government Service Home)


கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, ஆதரவற்ற பெண்களின்‌ நலனுக்காக அரசு சேவை இல்லங்களில் உணவு, தங்குமிடம்‌, கல்வி மற்றும்‌ தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்‌ பபனடைய குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.72,000 க்கு மிகாமலும்‌, வயது வரம்பு 14 முதல்‌ 45 வயது வரையும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


6-ஆம்‌ வகுப்பு முதல்‌ மேல்நிலை வகுப்பு வரை கல்வி, தையல்‌, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிற்சி, அழகுக்‌ கலைப்‌ பயிற்சி ஆகிய பயிற்சிகள்‌ அளிக்கப்படுகின்றன. சேவை இல்லத்தில்‌ அனுமதிக்கப்படும்‌ கைம்பெண்கள்‌ அவர்களது 3 குழந்தைகளைப்‌ பயிற்சி முடியும்‌ வரையில்‌ தங்க வைத்துக்‌ கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆண்‌ குழந்தை எனில்‌ 5 ஆம்‌ வகுப்பு வரையிலும்‌, பெண்‌ குழந்தை எனில்‌ 12 ஆம்‌ வகுப்பு வரையிலும்‌ அவர்களுடன்‌ தங்கி படிக்கலாம்‌.


பணிபுரியும்‌ மகளிருக்கான அரசு விடுதிகள் (‌Government Working Women's Hostel)


குடும்பத்தை விட்டு வெளியூரில்‌ பணிபுரியும்‌ குறைந்த மற்றும்‌ நடுத்தர வருவாய்‌ பெறும்‌ மகளிருக்கு உணவுடன்‌ பாதுகாப்பான தங்கும்‌ வசதி அளிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில்‌ பயன்‌ பெற மகளிரின் மாத வருமானம்‌ சென்னையில்‌, ரூ.25,000-த்திற்குள்ளும்‌, இதர மாவட்டங்களில்‌ ரூ.15,000-த்திற்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


இங்கு மூன்றாண்டுகள்‌ தங்கி பயன் பெறலாம்.  அதற்குமேல்‌, பயனாளியின்‌ தேவை, தங்கிப்‌ பயிலும்‌ காலத்தில்‌ நடந்துகொண்ட விதம்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ இல்லக்‌ காப்பாளரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ அனுமதிக்கலாம்‌. உள்ளுறைவாளர்‌ வாடகையாக சென்னையில்‌ மாதமொன்றுக்கு ரூ.300-ம்‌ இதர மாவட்டங்களில்‌ ரூ.200ம்‌ செலுத்த வேண்டும்‌. உணவு மற்றும்‌ மின்‌ கட்டணம்‌ விகிதாச்சார அடிப்படையில்‌ பகிர்ந்து கொள்ளப்படும்‌.


வரதட்சணைத்‌ தடுப்புச்‌ சட்டம்‌


வரதட்சணை வன்கொடுமையிலிருந்து பெண்களைப்‌ பாதுகாத்தல்‌ மற்றும்‌ வரதட்சணையை ஒழித்தல் ஆகியவற்றுக்காக இச்சட்டம்‌ 1961-ல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்‌ விதிகள்‌ தமிழ்நாட்டில்‌ 2004 ஆம்‌ ஆண்டு முதல்‌ நடைமுறைப்‌படுத்தப்பட்டன.


குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப்‌ பாதுகாக்கும்‌ சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005)


குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல்‌ மற்றும்‌ குடும்பத்திற்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும்‌ சட்டம்‌ 2005-ஆம்‌ ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.


இலவச நாப்கின்கள்


அதேபோல கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி, கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளிலும் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. 


பிற முக்கியத் திட்டங்கள்


இவை தவிர கர்ப்பிணிகளுக்கு சத்து மாவு உள்ளிட்ட நலப் பெட்டகம், மகப்பேறு உதவித் தொகை, உழைக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுமுறையுடன் கூடிய ஊதியம், தொட்டில் குழந்தை திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம் ஆகியவற்றையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதே போல மகளிர் சுய உதவிக் குழு, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றையும் தமிழ்நாடு அறிமுகம் செய்தது. 


இத்துடன் மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 மாதாமாதம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்திட்டம் விரைவில் அறிமுகமாகும் பட்சத்தில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும். 


இவை அனைத்தையும் தாண்டி 181 என்ற உதவி எண்ணையும் மகளிர் நலனுக்காகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. தேவை உள்ள பெண்கள் இந்த எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


Post Top Ad