10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் புது முறை அறிமுகம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 15, 2022

10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் புது முறை அறிமுகம்

 



தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்பதல் தேர்வு நடைபெற உள்ளது.


இந்த தேர்வு எப்படி நடைபெற வேண்டும் அந்த தேர்வுத்தாழ்வுகளை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு தேர்வுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.


கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுகின்றன.


பொதுத்தேர்வு எழுதும் பத்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்து தேர்வுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளது.


விடைத்தாள்களை திருத்துவது எப்படி


முதல் திருப்புதல் தேர்வு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி, திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது என்றும், ஒரே பள்ளியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல், வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள்


இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பொதுத் தேர்வு நடத்துவதை போன்றே, திருப்புதல் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடைத்தாள்கள் திருத்தம்


விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து, திருத்திக் கொள்ள வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டுக்கு வழங்கக் கூடாது. விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பள்ளி கல்வித் துறையின், ‘எமிஸ்’ மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பின்னா் அறிவிக்கப்படும். திருப்புதல் தேர்வுகளை புகாா்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு நடைபெறுமா?


திருப்புதல் தேர்வினை பொதுத்தேர்வு போல நடத்த வேண்டும் என்றும் விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தாலும் கொரோனா பரவல் வேகத்தைப் பார்த்தால் பொதுத்தேர்வு நடத்தாமல் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களையே பொதுத்தேர்வு மதிப்பெண்களாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.




Post Top Ad