பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 1, 2021

பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு !

 





கல்விக் கட்டணம் செலுத்தாமல் வாங்கிச் செல்லும் மாற்றுச் சான்றிதழ்களில் "கல்விக் கட்டணம் பாக்கி" என முத்திரை குத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்திவிட்டால் புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது.


 கொரோனாவால் பாதிப்பு  - பெற்றோர், மாணவர்கள் பாதிப்பு


2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பால் பலர் வேலையிழந்தனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். பல தனியார் பள்ளிகளில் ஏற்கனவே இருந்த கல்வி கட்டண பாக்கியை செலுத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியாது என கூறியதால் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதனால் பள்ளியில் இருந்து விடுபட முடியாமலும், அரசுப் பள்ளியில் சேர்க்க முடியாமலும், கல்வியை அதே பள்ளியில் தொடரமுடியாமலும் தவித்தனர்.


 டி.சி. இல்லாமல் சேர்க்கலாம்  - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


இது தொடர்பான பிரச்சனை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்கு சென்றது. இதற்கு விளக்கம் அளித்த கல்வித்துறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வேலையையும், பொருளாதாரத்தையும் இழந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை கட்டணம் குறைவாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கோ அல்லது அரசுப் பள்ளிகளுக்கோ மாற்றுகின்றனர். எனவே பழைய பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் டி.சி. வாங்கி வரவில்லை என்றாலும் அவர்களை சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என தெரிவித்திருந்தது.


வழக்கு


இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் தரப்பில் வாதாடிய தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பித்தான் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், செலவினங்களும் உள்ளது. மாணவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாவிடில், நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என அறிவிப்பதால், எந்தெந்த மாணவர்கள் படிப்பை தொடர்கின்றனர், எந்த பள்ளியில் சேர்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாமல் போகும் என்றும், இதனால் பள்ளிகளின் நிர்வாகம்தான் பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது. மேலும் கட்டணம் வசூலிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிட்டால் பின்னர் வசூலிப்பது கடினம் என்றும் எனவே திரும்ப பணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சங்கரன் கோரிக்கை விடுத்தார்.


டி.சி.யில் கட்டண பாக்கி என முத்திரை


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முழுக் கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் அதே சமயம் கட்டண பாக்கி வைத்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் டி.சி.யில் 'கட்டண பாக்கி உள்ளது' (Fees Pending) என குறிப்பிடலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான இ.எம்.ஐ.எஸ். இணைய தளத்தில் தேவையான திருத்தங்களை 2 வாரத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தார்.


Post Top Ad