TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை?- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 3, 2021

TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை?- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

 





2013 , 2017 , 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்குக் காத்திருப்பதாகவும் பள்ளி திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்துப் பரிசீலனை செய்து உரிய நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:



“மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யத் தெரிந்த பிரதமர் மோடி, ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளதுடன், கல்லூரிகளில் சேரும் அனைவருக்கும் கரோனா காலத்தைப் பயன்படுத்தி தேசிய நுழைவுத் தேர்வைக் கொண்டு முயற்சியாக இது உள்ளதாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் அனைத்துக் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.


ஏற்கெனவே 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என்று குழு அமைத்து கருத்துக் கேட்டு வருகிறோம்.




இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கும் சரியாக மதிப்பீடு செய்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.


ஏனெனில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் கருத்துத் தெரிவித்திருந்தனர்.


முதல்வர் அறிவுறுத்தியபடி மாணவர்களின் எதிர்காலம் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் அவர்களது உடல் நலனும் முக்கியம். எனவே, அதைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்.



மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுப்பிய கடிதத்தில்கூடத் தேர்வுகளை எப்படி நடத்தலாம் என்றுதான் கருத்து கேட்கப்பட்டிருந்ததே தவிர, தேர்வை ரத்து செய்வது குறித்து கருத்து கேட்கவும் இல்லை- கூறவும் இல்லை. ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


2013, 2017, 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்குக் காத்திருக்கின்றனர். பள்ளி திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்துப் பரிசீலனை செய்து உரிய நல்ல முடிவு எடுக்கப்படும்".



இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிளஸ் 2 தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


தோழமைக் கட்சியினர் கூறும் கருத்துகளை முதல்வர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.



Post Top Ad