தமிழக அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின் படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியாத சூழல் நிலவுவதால் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Capture
பாடங்கள் குறைப்பு: கொரோனா நோயின் காரணமாக பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டில் ஜனவரி மாதம் தான் திறக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், நேரடி வகுப்புகள் நடக்காததால் மாணவர்கள் தேர்வு குறித்து மனஅழுத்தத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்று பொதுத்தேர்வுக்கான பாடங்களை 30% குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆசிரியர்களின் அதிர்ச்சி: இந்நிலையில் நேற்று தமிழக அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் வரும் மே மாதம் 3ம் தேதி முதல் நடக்க உள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பொதுத்தேர்வு இந்த வருடம் தாமதமாக தொடங்கப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
மேலும், அரசுப்பள்ளி மாணவர்கள் பலரிடம் ஆன்லைன் வகுப்புக்கான வசதிகள் இல்லாததால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்குள் அரசின் குறைக்கப்பட பாடங்களில் பாதியை கூட நடத்த முடியாது என்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வுக்கான முன்னேற்பாடுகள்: மே மாதம் தேர்வுகள் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் முழுவதும் செயல்முறை தேர்வுக்கு மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகளுக்காக ஒதுக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது மார்ச் மாதத்திற்குள் பாடங்களை நடத்த முடியாது. மேலும், புத்தகங்களில் பாடங்கள் குறைக்கப்படாமல், சில உள்பிரிவுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு புரிய வைப்பதற்காக முழுவதுமாக நடத்த வேண்டிய சூழல் உள்ளது. பாடத்தை கூடுதலாக குறைக்க வேண்டும், அல்லது தேர்வுக்கு கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.