திருச்சி கல்வி மாவட்டத்தில் கல்விவித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சிவனேசன். இவர் முத்தரசநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அந்த ஆசிரியர்களை இணைத்து ஒரு வாட்ஸ்ஆப் குழு ஒன்று உள்ளது. அந்த குழுவில் சிவனேசன் ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தனக்கு தெரிந்த துறையூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவர் தொடர் விடுமுறையில் இருப்பதாகவும், அவர் மேக் யுவர்செல்ப் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 500 ரூபாய் வட்டியாகவும், 10 மாத முடிவில் அசல் தொகையை திருப்பி தருவதாகவும், நல்ல நிறுவனம் பணத்திற்கு தான் உத்தரவாதம் எனக்கூறியுள்ளார்.
ஒரு லட்ச ரூபாய்க்கு எப்படி நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கொடுக்க முடியும் என ஆசிரியர்கள் கேட்ட போது, அவர்கள் டிரேடிங் தொழில் செய்து வருவதாகவும் அதில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை பிரித்துக்கொடுப்பதாக கூறியுள்ளார்.
சிவனேசன் உடன் இணைந்து செல்வராஜும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. கல்வித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியும், அரசுப்பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரும் கூறுவதை நம்பி பல ஆசிரியர்கள் பணத்தைக் கட்டியுள்ளனர்.
ஆசிரியையாக இருக்கும் ஒருவர் தனது கணவர் மூலம் நகையை அடகு வைத்தும், கடன் வாங்கியும் 47 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.ஆரம்பத்தில் முறையாக வட்டிப் பணம் கொடுத்து வந்த நிறுவனம் திடீரென்று பணம் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், இவர்கள் முதலீடு செய்த பணத்தையும் சுருட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மோசடியில் ஈடுபட்டதாக செல்வராஜ் மற்றும் சிவனேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
VIDEO