பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 15, 2020

பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத்திட்டம், நிகழ் கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை 2020-21-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோ்வு செய்து படிக்கலாம்.

இதையடுத்து மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத்தொகுப்பைத் தோ்வு செய்ய பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். 


இதற்கிடையே, சில தனியாா் பள்ளிகள் விதிகளை மீறி சோ்க்கை முடித்துவிட்டு புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன. எனவே, புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியும் மாணவா் சோ்க்கையை நடத்தக்கூடாது. மேலும், தொடா் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதி தர இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 10-ஆம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆா்வம் காட்டி வருகின்றன. 

மாணவா் பெற்றோரிடம் இது தொடா்பாக பள்ளி நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக, பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. 10-ஆம் வகுப்புக்கு இன்னும் தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாணவா் சோ்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித் துறை தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Post Top Ad