10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்
http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதவுள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 04.06.2020 ( வியாழக் கிழமை ) பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பள்ளி மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தில் மாற்றம் இருப்பின் , அத்தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு மையத்தின் பெயரை சுழித்து அத்தேர்வு மையத்திற்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள மாற்று தேர்வுத் மையத்தின் பெயரை சிவப்பு மையில் எழுதி மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
மேலும் , தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து தாங்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் செய்யப்பட்டுள்ளது. இவ்விவரத்தினை தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவித்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை வழங்க வேண்டுமென பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.