திருப்பத்தூரை அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரின் மனைவி மது. இவர்களின் 5 வயது மகள் தேவதர்ஷினி, கந்திலியை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள 'ரெயின்போ' பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக பச்சையப்பன், தன் மனைவியுடன் பிழைப்பு தேடி கும்பகோணம் சென்று பானிபூரி கடை வைத்துள்ளார். மாணவி தேவதர்ஷினி, தன் பாட்டி ஹரியம்மாள் (69) அரவணைப்பில் தங்கி பள்ளிக்குச் சென்றுவந்தார்.
பள்ளி வளாகத்தில் தேவதர்ஷினி திடீரென மயக்கமடைந்ததாகவும் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பாட்டி ஹரியம்மாள், பதறியடித்துக்கொண்டு உறவினர்கள் சிலருடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு, பேத்தி தேவதர்ஷினி சடலமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்ததப் பார்த்து கதறி அழுதார்.
''பேத்தியின் உடம்பில் காயம் உள்ளன. பள்ளி நிர்வாகத்தினரும் தவறான தகவல் கொடுத்துள்ளனர். பேத்தி சாவில் சந்தேகம் இருக்கிறது'' என்று கந்திலி காவல் நிலையத்தில் பாட்டி ஹரியம்மாள் புகார் அளித்தார். வகுப்பறை மாடியிலிருந்து மாணவி தேவதர்ஷினி தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் தகவல் பரவியது. மாணவியின் சந்தேக மரணம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்தினரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த நிலையில், பள்ளி நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று காலை பள்ளிக்கு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் கூறுகையில், ''மாணவி தேவதர்ஷினி தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பள்ளி நிர்வாகம் தரப்பில் இதுவரை மாணவியின் பெற்றோரை சந்தித்து உரிய விளக்கம் கொடுக்கவில்லை. சாவில் நிச்சயமாக சந்தேகம் இருக்கிறது. பள்ளி நிர்வாகம் எதையோ மறைக்கப்பார்க்கிறது'' என்றனர் ஆவேசமாக.
புகார் தொடர்பாக, 'ரெயின்போ' பள்ளி தாளாளர் ஆனந்த குமாரிடம் பேசினோம். ''மாணவி தேவதர்ஷினி ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்ட மாணவி, கடந்த 10 நாள்களாகத்தான் பள்ளிக்கு இடைவிடாமல் வந்தார். நேற்று மாலை 3 மணியளவில் பள்ளி வளாகத்தில் சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மயக்கமடைந்து, அருகில் உள்ள மாணவியின் மடியில் சாய்ந்துள்ளார். பள்ளி ஊழியர்கள் அனைவரும் அங்குதான் இருந்தனர். மாணவியை உடனடியாக மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
பள்ளித் தாளாளர் ஆனந்த குமார்பள்ளிமீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தினோம்.
பெற்றோருக்கு போன் செய்தோம், அவர்கள் எடுக்கவில்லை. உடனே, பள்ளி வேன் ஓட்டுநரை வீட்டுக்கு அனுப்பி பாட்டியை கையோடு அழைத்து வரச் சொன்னோம். பரிசோதனையில், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மாடியிலிருந்து மாணவி விழவில்லை. பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலைக் கொடுத்துவிடுமாறு உறவினர்கள் கூறினர். பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க, மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தினோம். பள்ளி தரப்பில் நாங்கள் கவனமாகத்தான் இருந்தோம்'' என்றார்.