அரசுப் பள்ளி ஆசிரியரிலிருந்து டி.எஸ்.பி பணி... விடாமுயற்சியால் தேர்வுகளை வென்ற மகேஷ்குமார்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 9, 2020

அரசுப் பள்ளி ஆசிரியரிலிருந்து டி.எஸ்.பி பணி... விடாமுயற்சியால் தேர்வுகளை வென்ற மகேஷ்குமார்!





அரசுப் பள்ளி ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர், மகேஷ் குமார். மக்களுக்கான நேரடி நிர்வாகப் பணியில் களப்பணியாற்ற வேண்டும் என்ற முனைப்பில், குரூப் 2 அதிகாரியானார். பிறகு, இடைவிடாமல் ஐந்து முறை குரூப் 1 தேர்வில் தோல்வியடைந்தாலும், ஆறாவது முறையில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார், இந்தத் தன்னம்பிக்கை அதிகாரி.சமீபத்தில் வெளியான குருப் 1 தேர்வு முடிவுகளில், இவருக்கு டி.எஸ்.பி பணி ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.



விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார் மகேஷ் குமார்.

``என் பூர்வீகம், தென்காசி மாவட்டம் புளியங்குடி கிராமம். ஏழ்மையான குடும்பம். சிங்கிள் பேரன்டான அம்மா, விவசாயி. சிரமப்பட்டுத்தான் என்னை வளர்த்தார். அரசு உதவிபெறும் பள்ளியில்தான் படித்தேன். பி.எஸ்ஸி முடித்துவிட்டு, ஓர் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை செய்தேன். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்துச் சூழலில் இயங்கிய பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது, பள்ளியின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன்.




இதற்கிடையே அரசின் நிர்வாகப் பணிக்குச் செல்ல வேண்டும்; மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானேன். ஆசிரியர் பணிக்கு நடுவே, ஓய்வு நேரங்களில் போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமே நேரத்தைச் செலவிட்டேன். 2012-ம் ஆண்டு, முதல் முயற்சியிலேயே குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றேன்.

திருநெல்வேலி கூட்டுறவுத்துறை முதன்மை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தேன். பிறகு, பதவி உயர்வு பெற்று சில ஆண்டுகளாகத் தென்காசியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்" என்பவர், இதற்கிடையே தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கும் தயாராகியிருக்கிறார்.

மகேஷ் குமார்பல அரசுப் பணிகளில் அடுத்தடுத்து மாறி வந்தாலும், பணியாற்றிய எல்லா இடங்களிலும் என் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் என் இலக்குப்படி கலெக்டராகி மக்களுக்காகப் பணியாற்றுவேன்.
``கூட்டுறவுத்துறை அதிகாரியாக நல்ல பணியில் இருந்தாலும்கூட, நேரடியாக மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு, உயர்பொறுப்பில் இருக்கும்போது நாம் நினைத்த விஷயங்கள் பலவற்றையும் நேரடியாகச் செய்து முடிக்க முடியும். எனவே, இணை ஆட்சியர் (Deputy Collector) பொறுப்புக்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டேன். அந்தப் பதவியில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற முடியும். அதற்காக மிகவும் ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

அப்போது எனக்குக் கல்யாணமாகியிருந்தது. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது, பணிச்சூழல் எனப் பல்வேறு சவால்கள் இருந்தன. ஆனாலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குரூப் 1 தேர்வை எழுதினேன். நேர்முகத்தேர்வு வரை சென்றாலும்கூட வெற்றி கிடைக்காமலேயே இருந்தது.



சிரமங்கள் இன்றி எந்த ஒரு பெரிய வெற்றியையும் பெற முடியாது. இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டுதான் படித்தேன். பலரும் வெற்றி கிடைக்கவில்லை எனச் சில முயற்சியிலேயே வேறு துறைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், நான் உறுதியாக இருந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, குரூப் 1 தேர்வுக்கு முந்தைய இரண்டு மாதங்கள் பணியில் விடுமுறை எடுத்துக்கொள்வேன். சென்னை வந்து பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தேன். ஆறாவது முறையாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சிறப்பாக மூன்று நிலை தேர்வுகளையும் எதிர்கொண்டேன். கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகி இம்முறை வெற்றி கிடைத்தது" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இந்தத் தேர்வில் மகேஷ் குமார், 157-வது ரேங்க் பெற்றிருப்பதுடன், தமிழ் வழியில் படித்து தேர்வெழுதியவர்களில் ஏழாவது ரேங்க் பெற்றிருக்கிறார்.

``எனக்கு இன்னும் ஒரு முறை குரூப் 1 தேர்வை எழுத வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுக்கும் தயாராகிவருகிறேன். இம்முறை தேர்வில் வெற்றி பெறுவதுடன், இணை ஆட்சியர் பணி கிடைக்கும் வகையில் அதிக மதிப்பெண் பெறும் முனைப்பில் இருக்கிறேன். கடந்த திங்கள்கிழமை எனக்கான பணி ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றேன்.

பயிற்சிமுடிந்ததும், விரைவில் டி.எஸ்.பி அதிகாரியாகப் பணியைத் தொடங்க இருக்கிறேன். பல அரசுப் பணிகளில் அடுத்தடுத்து மாறி வந்தாலும், பணியாற்றிய எல்லா இடங்களிலும் என் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் என் இலக்குப்படி கலெக்டராகி மக்களுக்காகப் பணியாற்றுவேன்" என்கிறார் உறுதியுடன்.



Post Top Ad