IITயைக் குறி வையுங்கள்.. சிறப்பு கட்டுரை!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 9, 2020

IITயைக் குறி வையுங்கள்.. சிறப்பு கட்டுரை!!





IITயைக் குறி வையுங்கள்.. சிறப்பு கட்டுரை!!

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களே பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்து விடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இரும்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள் தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். 

வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசரப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக்கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது. 


நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் சேர்த்து விடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வர வேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர். 

பிஇ படித்து விட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூறையாடப்பட்டு விட்டதை உணர்கின்றனர். 

இதற்கெல்லாம் காரணம் என்ன? 

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பது தான். முதலில் எந்தப் படிப்பில் சேர வேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேர வேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்து விடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்து விடுகின்றனர். 

ஆனால்,  வட இந்தியர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர். அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகிறார்கள்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவது தான் கடினம். நுழைந்தப் பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்து விடுகின்றன. பணம், தொழில்நுட்பக் கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர். இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா? 

இல்லை.. 

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்குப் போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல்துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்து விட்டனர். 

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில் தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்து விடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில் தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்து விட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பது தான் அந்த பதில். 

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரை தான் வழங்குகிறேன்... 


'ஐஐடியைக் குறி வையுங்கள்..'

Post Top Ad