கார்த்திகை தீபத்திற்கு பழைய விளக்குகள் ஏற்றலாமா/விளக்கேற்றும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 10, 2019

கார்த்திகை தீபத்திற்கு பழைய விளக்குகள் ஏற்றலாமா/விளக்கேற்றும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்??





கார்த்திகை மாதம் மிக, மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம். இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம்.

கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். கடைசி நேரத்தில் விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.
பழைய விளக்குகளை வீட்டில் ஏற்றலாமா?
வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடம் வருடம் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும்.

பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.

புதிய அகல் விளக்கு :

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும்.
4மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும்.
காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும்.
திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

நெய் தீபம் :
முடிந்தால் எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
எப்படி தீபம் ஏற்ற வேண்டும்?
விளக்கை தரையில் வைக்காமல் ஒரு சிறு தட்டின் மீதோ, வெற்றிலை மீதோ, வாழை இலையை சதுரமாக வெட்டி அதன் மீதோ வைக்கலாம். இது பார்க்கவும் அழகாக இருக்கும். தரையிலும் எண்ணெய் வடியாது.

தீபங்கள் அனைத்தையும் வாசலில் ஏற்றிய பிறகு வீட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்வது மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
மாலையில் வாசல் தெளித்து, அழகான கோலங்கள் போட்டு அதன்மீது விளக்குகளை வையுங்கள்.

அரிசிமாவு கோலம் :
அரிசிமாவு கொண்டு கோலம் போடவும். கோலத்தை சுற்றி காவி நிறம் கொண்டு வர்ணம் தீட்டவும். காவி நிறம் சிவசக்தி வடிவமாக கருதப்படுகிறது.
மாவிலை தோரணம் :
காலையிலேயே தலைவாசல் படிக்கு மேலே மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
மாவிலை தோரணம் விசேஷ நாட்கள் மட்டும் இல்லாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கட்டுவது நல்லது.
காய்ந்த மாவிலையை கழட்டி விட வேண்டும். மாவிலை தோரணம் கெட்ட சக்திகள் வருவதை தவிர்க்கிறது. திருஷ்டி ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வளையமாக அமைகிறது.
குத்துவிளக்கு பூஜை :
குத்துவிளக்கு பூஜை கார்த்திகை தீபத்தன்று செய்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும். குத்துவிளக்கு தண்டு பகுதியில் பூ அல்லது மஞ்சள் கயிறு சாற்றி வழிபடவும்.

செய்யக்கூடாதவை :

கார்த்திகை தீபத் திருநாள் அன்று விளக்குகளை சுத்தம் செய்யக்கூடாது. எனவே, முதல் நாளே வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் சுத்தம் செய்வது சிறப்பு.
மாடிப்படிகள், வராண்டா, கூடம் போன்ற இடங்களில் விளக்கேற்றுவதற்கு, கீறல் விழுந்த அல்லது உடைந்த அகல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

Post Top Ad