தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்திற்கும், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்தில் பொங்கல் பண்டிகையினை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வெளியூரில் பணியாற்றி வரும் நபர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு, முன்பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும், தமிழக அரசின் சார்பாக தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையான 2020 ஜனவரி மாதம் 16 ஆம் தேதியன்று பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உரையாற்றவுள்ளார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்கு பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில், பொங்கலுக்கு மறுநாளான ஜன.16இல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம். அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.