தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள 27 மாவட்டங்களிலும், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 15ம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. சேலம் மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,294 பதவிகளுக்கு, முதற்கட்டமாக வரும் 27ம் தேதியும், 2,005 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 2,935 பேரும், வாக்குப்பதிவு அலுவலர்களாக 18,692 பேரும் என மொத்தம் 21,645 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், 20 ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், தனித்தனியாக நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் சுமார் 2,170 அலுவலர்கள், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. வராதவர்களிடம் விளக்கத்தை பெற்று அனுப்ப, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை இன்று (18ம் தேதி) அவரவருக்கு பணி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.