அரபிக் கடலில் உருவானது MAHA புயல்: நாளை தீவிர புயலாக மாறும்...இந்திய வானிலை மையம் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 30, 2019

அரபிக் கடலில் உருவானது MAHA புயல்: நாளை தீவிர புயலாக மாறும்...இந்திய வானிலை மையம் தகவல்






தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப் பெற்றுள்ளது. இதனால் குமரி கடல் முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 111 மி.மீ, புதுச்சேரியில் 88.3 மி.மீ, தூத்துக்குடி, பாளையங்கோட்டை 71 மி.மீ, சென்னை விமானநிலையத்தில் 55 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது தவிர தமிழகத்தின் மழைமானி மூலம் மழை அளவீடு செய்யப்படும், 28 நகரங்களிலும் மழை பரவலாக பெய்துள்ளது.


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அடுத்த 48 மணிநேரத்திற்கான முன்அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் குமரி கடல் முதல் சென்னை கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை சில பகுதிகளில் பதிவாக வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 93 டிகிரி பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை துறை தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டிளித்தார். அப்போது, நேற்று குமரி கடலில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று திருவனந்தபுரத்தில் இருந்து தென்மேற்கில் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் லட்சத்தீவை கடந்து செல்லும் என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், அரபிக் கடலில் மகா புயல் உருவானது. லட்சத்தீவு பகுதியில் நிலைக்கொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி மகா புயல் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அதிதீவிர காற்றழுத்தம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு 'மகா' என்று பெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. அதன்படி, மகா புயல் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad