விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அரசுப் பள்ளியில் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பள்ளியில் பிரத்யேக வகுப்பறையில் பாடங்கள் தொடர்பான கருத்துகளை வழங்க, கரும்பலகையுடன் கூடிய கணினி திரைகள் (புரஜெக்டர்) அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பாடங்கள் தொடர்பான காட்சிகளை இணைய வழியில் பதிவேற்றம் செய்து கணினி திரையில் ஒளிபரப்பி கற்பித்து வருகின்றனர்.
இந்த வகையில், திருக்கோவிலூர் அருகேயுள்ள சித்தேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை கணினி வகுப்பறையில் மாணவர்களுக்கு காட்சி ஒளிபரப்பப்பட்டது. அது திரைப்படம் சார்ந்த காட்சிகள் என புகார் எழுந்தது. இதையடுத்து, திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் துரைப்பாண்டியன் அப்பள்ளிக்குச் சென்று விசாரித்தார்.
சனிக்கிழமை பள்ளிப் பாடவேளை நேரத்தில் பிற்பகல் 3 மணியளவில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்கள் அந்த வகுப்பறையில் அமர்ந்து, விஜய் நடித்த நண்பன் திரைப்படக் காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்தப் பள்ளியில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர் எட்வர்ட்விக்டர்பாபு, அந்த திரைப்படத்தை மாணவர்களுக்கு ஒளிபரப்பி காண்பித்தது தெரிய வந்தது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் எட்வர்ட்விக்டர்பாபுவை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் உத்தரவிட்டார்.