மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - மாணவர்கள் நிலை கேள்விக்குறி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, August 19, 2019

மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - மாணவர்கள் நிலை கேள்விக்குறி!




தமிழகத்தில் 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உரிய திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு இன்னும் இந்தாண்டு நடைபெறவில்லை.

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டரை மாதமாகியும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்டத்திற்கு 60க்கும் மேல் வீதம் காலியாக இருப்பதால் மாணவ மாணவியர் கடும் அவதிப்பட ெதாடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 11ம், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு பல பிரிவுகளுக்கு இதுவரை பாடம் எடுக்கப்படாததால் மாணவ மாணவியரும், பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2144 முதுகலை பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.  இதற்க்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு தேதி ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனை போன்று கோடை விடுமுறை காலத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டிய ஆசிரியர் பொதுமாறுதல்  கலந்தாய்வு பின்னர் மக்களவை தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. மீண்டும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கிய நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டது.

இதனால் கலந்தாய்வு மீண்டும் முடங்கியது. இந்தநிலையில் அடுத்த மாதம் 16ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிய திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடியாத அவலம் இந்தமுறை ஏற்பட்டுள்ளது. மேலும் இடமாறுதலை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் பாட பிரிவுகளில்  கூடுதல் கவனம் செலுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவியரின் நிலை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்த மாதம் கலந்தாய்வு முடிந்து அதன் பின்னர் ஆசிரியர்கள் மாறுதல் பெற்று பள்ளிகளுக்கு வருகை  தந்து பாடத்தை தொடங்கும்போது காலாண்டு தேர்வும் நெருங்கிவிடும் என்பதால் எப்படி பாடங்களை பயில்வது என்று மாணவ மாணவியர் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். சில பள்ளிகளில் வேறு பாடங்களை பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களை கொண்டும், இருக்கின்ற ஆசிரியர்களை வைத்தும் பெயரளவில் சமாளிக்கின்ற நிலைமை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 9 அரசு மேல்நிலை பள்ளிகளில்  ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


 ஆங்கிலம் 4 பள்ளிகளிலும், கணிதம் 10 பள்ளிகளிலும், இயற்பியல்-1, வேதியியல்-3, தாவரவியல் 4, விலங்கியல் 4, வரலாறு-2, வணிகவியல்-6, பொருளியல்-9, உடற்கல்வி இயக்குநர் நிலை-1ல் 2 என  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும் 15 அரசு மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில் மட்டும் 60க்கும் முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை தவிர உயர்நிலை  பள்ளிகளிலும் இதே சூழல்தான் உள்ளது. இதே போன்ற நிலைதான் தமிழம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இவை ஒருபுறம் இருக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் பலவற்றிலும்  ஆசிரியர் பணியிடங்கள் அரசால் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மிக குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே பணியாற்றி ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர்  பணியிடங்கள்தான் இவ்வாறு நிரப்பப்படாமல் உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பதாக கூறுகின்ற கல்வித்துறை அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பாமல் தட்டிக்கழித்து வருகின்றனர்.எனவே உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  எனவே தமிழக அரசும், கல்வித்துறையும் மாணவ  மாணவியர் நலன் கருதி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவாக நிரப்பி மாணவ மாணவியரின் மேல்நிலை கல்வி பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.

Post Top Ad