வாக்கு எண்ணிக்கை என்பது எப்படி நடக்கும்? உங்களுக்கிருக்கும் சந்தேகங்களுக்கு இதோ பதில் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 23, 2019

வாக்கு எண்ணிக்கை என்பது எப்படி நடக்கும்? உங்களுக்கிருக்கும் சந்தேகங்களுக்கு இதோ பதில்

மக்களவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை அதாவது மே 23ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வழிமுறைகள் பற்றி பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் விளக்கியுள்ளது.

542 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இந்தியாவில் 2000ஆவது ஆண்டு முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்தாலும், இந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளுக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு யார் பொறுப்பு?
தேர்தல் நடத்தும் அதிகாரியே வாக்கு எண்ணிக்கைக்கு பொறுப்பாவார். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருக்கும்.

வாக்கு எண்ணிக்கை எங்கு நடைபெறும்?
தேர்தல் நடத்தும் அதிகாரியே இந்த இடத்தை தேர்வு செய்வார். ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும் போது பிற வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியால் நியமிக்கப்படும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

ஒரு வாக்கு எண்ணும் மையத்தின் ஒரே ஒரு அறையில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரே நேரத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படும்.

ஒரு வேளை நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்கள் நடந்திருந்தால்?
ஒடிஸா போன்று நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றால், முதல் 7 மேஜைகளில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களும், அடுத்த 7 மேஜைகளில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

அதிக வேட்பாளர்கள் இருந்தால் கூட்ட நெரிசல் ஏற்படுமே?
அப்படியான நிலையில், பெரிய அறையிலோ அல்லது மேஜைகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, தேர்தல் ஆணையத்தின் முன்னறிவிப்போடு மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

யார் யார் இருக்கலாம்?
வாக்குகளை எண்ணும் போது, வேட்பாளர், அவரது இரண்டு ஏஜெண்டுகள் உடன் இருக்கலாம்.

எண்ணும் பணி எப்படி தொடங்கும்?
தேர்தல் ஆணையம் சொன்ன நேரத்தில், எலக்ட்ரானிக் டிரான்மிட்டட் போஸ்டல் பல்லோட் மற்றும் தபால் வாக்குகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் நேரடிப் பார்வையின் கீழ் எண்ணப்படும். தபால் வாக்கு எண்ண ஆரம்பித்து 30 நிமிடம் கழித்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பணி ஆரம்பிக்கும்.

14வது இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானதும், ஒரு சுற்று முடிந்ததாக கருதப்படும்.

ஒப்புகைச் சீட்டை எண்ணும் முறை?
ஒவ்வொரு தொகுதியிலும் உத்தேசமாக 5 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்ட வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

 வாக்கு எண்ணிக்கைகள் முடிந்ததும், ஒவ்வொரு வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் ஏதேனும் ஒரு மேஜையில் வைத்து எண்ணப்படும்.

வெற்றி முடிவை யார் அறிவிப்பார்கள்?
தேர்தல் நடத்தும் அதிகாரியே வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்.

 வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிய பிறகு வெற்றி முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும், ஒப்புகைச் சீட்டுக்கும் இடையே வேறுபாடு இருந்தால்?
வாக்கு ஒப்புகைச் சீட்டில் இருக்கும் வாக்கு எண்ணிக்கையே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்


. ஆனால், இந்த வேறுபாடு இருப்பின் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

Post Top Ad