'தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. தென் மேற்கு பருவ மழையால் இரண்டு வாரங்களில் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நீடிப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டுக்கான பருவ மழை காலம் மே 18ல் அந்தமான் தீவுகளில் துவங்கியது. இது படிப்படியாக வலுப்பெற்று கேரளாவை நோக்கி நகரும். நாளை மறுநாள் 30ம் தேதிகளில் அந்தமான் முழுவதும் பருவ மழை தீவிரம் அடையும்; ஜூன் 6க்குள் மழை கேரளாவுக்கு நகரும் என எதிர்பார்ப்படுகிறது.
இந்நிலையில் வரும் நாட்களுக்கான வானிலை நிலவரத்தை நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பான அளவை விட வெயில் கூடும். கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப சலனத்தால் லேசான மழை பெய்யலாம்.