பொது தேர்வில் சென்டம் குறையும் - ஆசிரியர்கள் அதிர்ச்சி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 4, 2019

பொது தேர்வில் சென்டம் குறையும் - ஆசிரியர்கள் அதிர்ச்சி


பிளஸ்1 வேதியியல் விடைத்தாள் கீ ஆன்சரில், புதிய கட்டுப்பாடுகளால் சென்டம் குறையும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ்1, பிளஸ்2, எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் வேதியியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் பிரிவில், அமிலமழையின் பிஎச் மதிப்பு எவ்வளவு என்ற கேள்வி? கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி புத்கத்தின் பின்பகுதியில் இடம் பெற்ற கேள்வியாகும். இதற்கு 4.6 என விடை உள்ளது.

ஆனால், பாடபுத்தகத்தின் உள்பகுதியில் 5.6 என இடம் பெற்றுள்ளது. விடைத்தாள் திருத்த தேர்வுத்துறை அளித்திருந்த கீஆன்சரில், அமிலமழையின் பிஎச் மதிப்பு என்ற கேள்விக்கு 5.6 என விடை எழுதியிருந்தால் மட்டுமே ஒரு மதிப்பெண் அளிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், பாடபுத்தகத்தின் பின்பகுதியில் உள்ள விடையான 4.6 என எழுதியிருந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


நடப்பாண்டு பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடபுத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாடபுத்தகத்தில் பின்பகுதியில் ஒரு விடையும், புத்தகத்தின் உள்பகுதியில் ஒரு விடையும் பாடபுத்தகம் தயாரித்த ஆசிரியர் குழு எழுதியது தான், இந்த குழப்பத்துக்கு காரணம் என வேதியியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதே போல 3 மதிப்பெண் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில், ஆவி அடர்த்தி என்பதற்கு பதில் ஆவி அழுத்தம் என கேட்கப்பட்டிருந்தது. இது தவறான கேள்வி என்பதால், இதற்கு விடை எழுத மாணவர்கள் முயன்றிருந்தாலே 3 மதிப்பெண் அளிக்கும்படி, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் பகுதியில், சமன்பாடு எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் எழுதவேண்டும். அதற்கு பதில் விளக்கம் எழுதியிருந்தால் மதிப்பெண் அளிக்க கூடாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. புதிய பாடபுத்தகம், இரண்டு விதமான பதில்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய நடைமுறை என பல புதிய கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு வேதியியல் தேர்வில் சென்டம் வாங்குவது குறையும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post Top Ad