குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க ஒப்புகை சீட்டு இயந்திரம் வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பாக்கியராஜ் தாக்கல் செய்த மனு: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வந்த பிறகும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இயந்திரத்தில்
கட்சிகளின் சின்னங்களை பொருத்தும் போது தில்லுமுல்லு செய்யப்படுவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் பதிவு செய்த ஓட்டுகள் குறிப்பிட்ட வேட்பாளர் பெயரில் பதிவாகிறதா என்பதை சரிபார்க்கும் வசதி உடைய ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஓட்டு சாவடிகளில் வைக்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் இந்த வசதிகளை ஏற்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார். தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் வாதாடியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி
ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை படிப்படியாக அமல்படுத்த துவங்கி விட்டோம்.
2017ல் தேர்தல் கமிஷன் கூட்டிய அனைத்து கட்சிகள் கூட்டத்தில் 2019 தேர்தலின் போது ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை முழுமையாக அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளதால் மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.