புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 8, 2019

புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?



1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல்லை என்றும், அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன?
   ஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.
   இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA)  இல் செலுத்த வேண்டும். தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.

      PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக  (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எந்த உரிமையும் கோர முடியாது. (கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)

   அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement - இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.

     சரி, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?

   அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். 

எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு  10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது. பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது. இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.

    சரி, ஓய்வு பெறும் முன்பே, விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு  என்ன கிடைக்கும்?

   அவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.

   சரி, பங்குச் சந்தையில் நட்டம் ஏற்பட்டால் யார் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வது?

   நம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.

   சரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

பொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.
  
   இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824.
   நான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கணக்கில் இருக்கும் உத்தேசமான தொகை: ரூ.10,40,000
நான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.

   அதன்பிறகு என் கணக்கில் இருக்கும் 40 % தொகை: = ரூ.4,16,000.  இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய  40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.

     என்னுடைய 40 % தொகை      = ரூ.4,16,000
இதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு= ரூ. 41,600
மாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466
ஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.

2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக இருக்கும். 2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும். அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

1.    இந்த நான்காயிரம் ரூபாயில் ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?

2.  நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு வீடு வாங்க முடியுமா? இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே?

      CPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே?  என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே?

    இவ்வளவுதான் பாதிப்பா? இதையும் பாருங்கள்:

இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824. இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.
   என்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம். இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும் என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். 

இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி. நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000. தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக்கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.

   வட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.

    நாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.
       
     

   புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்களும், அரசு ஊழியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளும் இதைச் சிந்திக்க வேண்டும்.

நன்றி.
*அருண்குமார்* மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A) நீலகிரி

Post Top Ad