பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சில்வர் தூக்குவாளி: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பால் வியாபாரி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 2, 2019

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சில்வர் தூக்குவாளி: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பால் வியாபாரி






திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ரூ.1 லட்சம் செலவில் சில்வர் தூக்குவாளி வழங்கி பால் வியாபாரி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
வேடசந்தூரைச் சேர்ந்தவர் தனபாலன்(38). இவர், வேடசந்தூர் மாரம்பாடி சாலை பகுதியில் தனியார் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையத்திற்கு, தினமும் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சில்லரை விற்பனையில் பால் வாங்கிச் செல்கின்றனர்.
இதற்கு முன்பு, பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, பிளாஸ்டிக் பைகளிலேயே பால் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, தன்னிடம் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை சில்வர் தூக்குவாளி மூலம் பால் வழங்கினார்.
இதுதொடர்பாக தனபாலன் கூறியது:
தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தவுடனேயே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 10 வாடிக்கையாளர்களுக்கு சில்வர் தூக்குவாளி வழங்கினேன். அதனைப் பெற்றுச் சென்ற வாடிக்கையாளர்கள் மறுநாள் மீண்டும் வரும்போது, வாளியை எடுத்து வரவில்லை. பிளாஸ்டிக் பைகளிலேயே மீண்டும் பால் வாங்கிச் சென்றனர். இதனால், பிற வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி வழங்குவதை நிறுத்தி வைத்தேன்.
தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் செலவில் சில்வர் தூக்குவாளியை இலவசமாக வழங்குகிறோம். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அரசு மேற்கொண்டுள்ள முதல் முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை அளித்துள்ளேன். இதேபோன்று அனைத்து வகையான மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
தனபாலனின் முயற்சிக்கு, வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Post Top Ad