கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வருவாய்த்துறை ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத் துறையின் இணை ஆணையர் லட்சுமி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 10ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, சில கிராம நிர்வாக அலுவலர்கள் 10ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 28ம் தேதியிட்ட கடிதம் மூலம், அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசின் பணிகள் பாதிக்கப்படும், அத்துடன் அந்த நடவடிக்கைகள் விதிகளை மீறிய செயலாகும். அதனால், முன்பே அனுமதி பெற்று விடுப்பு எடுக்காமல் குறிப்பிட்ட அந்த நாளில் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு NO WORK, NO PAY என்ற அடிப்படையில் சம்பளம் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இணை ஆணையர் லட்சுமி உத்தரவில் தெரிவித்துள்ளார்.