தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுந்தால் சர்க்கரை நோய் வரும்!' - அதிர்ச்சி தரும் ஆய்வு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 5, 2018

தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுந்தால் சர்க்கரை நோய் வரும்!' - அதிர்ச்சி தரும் ஆய்வு






தினமும் இரவில் குறைந்தபட்சம் 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த 8 மணி நேரம் என்பது குறிப்பிட்ட எந்த நேரம் என்பது பலருக்கும் தெரியவில்லை. இரவு 10 முதல் அதிகாலை 6 மணி வரை என்பதே சரியான `தூக்க ஒழுக்க முறை' என்கின்றனர் மருத்துவர்கள். `நைட் லேட்டா தூங்குவேன். அதுக்கேத்தமாதிரி, காலையில லேட்டா எழுந்திருப்பேன். என்னைப்பொறுத்தவரை, 8 மணி நேரம் நல்லாத் தூங்குவேன்' என்று தனக்கெனப் புதுவித தூக்க ஒழுக்கமுறை வைத்திருப்பார்கள் சிலர்.

தூக்க ஒழுக்கம்

இரவில் நீண்டநேரம் கழித்து தூங்கி, காலையில் தாமதமாக எழும் பழக்கம் இருப்பவர்களுக்கு, உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், இதுதொடர்பாக `ஊட்டச்சத்து முன்னேற்றத்துக்கான பத்திரிகை' (Journal Advances in Nutrition) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இப்படியான தவறான தூக்க ஒழுக்கம் கொண்டிருப்பவர்களுக்கு, நேரத்துக்குத் தூங்கி நேரத்துக்கு எழுந்திருப்பவர்களைக் காட்டிலும் `டைப் 2' சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



இதயப்பிரச்னைகள்

தவறான தூக்க ஒழுக்கம் இருப்பவர்கள், உணவு விஷயத்திலும் தவறான வாழ்வியலையே பின்பற்றுவார்கள் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. உதாரணமாக, காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடாதவர்களாக, மது மற்றும் புகைப் பழக்கம் உடையவர்களாக, கெட்டக் கொழுப்பு அதிகமுள்ள உணவை விரும்பி உண்பவர்களாக இருப்பார்களாம். `முறையற்ற தூக்க ஒழுக்கம் கொண்டவர்கள், பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கின்றனர்' என்று ஆய்வாளர்களில் ஒருவரான சுசானா கூறியுள்ளார்.

சர்க்கரை நோய்

மேலும் சுசானா கூறும்போது, `சிறுவயதில் இப்படியான பழக்கங்கள் இருந்தால், வளர்சிதை மாற்றங்கள் ஏற்படத்தொடங்கும். தூக்க ஒழுக்கம் சரியாக இல்லாதவர்கள், சாப்பிடும் நேரத்திலும், முறையற்றே செயல்படுவார்கள். பொதுவாக இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது சரியான பழக்கம். அப்படிச் செய்தால்தான், உடலில் குளுக்கோஸ் சுரப்பு சீராக இருக்கும். இரவு நேரத்தில் உடலில் குளுக்கோஸ் சீராக சுரப்பதுதான் இயல்பு. ஆனால், நேரம் கழித்து சாப்பிட்டுத் தூங்குபவர்களுக்கு குளுக்கோஸ் மிகவும் அதிகமாக இருக்கும். தினமும் இப்படி நேரம் கழித்து தூங்குவதால் அளவுக்கதிகமான குளுக்கோஸ் சுரக்கும்பட்சத்தில், உடலின் இயக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தி, இதயப்பிரச்னைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்' என்றார்.

Post Top Ad