சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவ கல்லூரி வளாக பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த பிந்து தங்கம் கல்யாணி என்ற டி.வி.கல்யாணி சபரிமலை கோவிலுக்கு சென்று, அய்யப்பனை தரிசனம் முயற்சி செய்தார். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர், வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 29ம் தேதி பணிக்கு சென்றார். அவர், சபரிமலை செல்ல முயன்றதை தெரிந்து கொண்ட மாணவர்கள், பிந்து வகுப்பறைக்குள் நுழையும் போது, சரண கோஷத்தை சத்தமாக பாடினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பள்ளி முதல்வரிடம் வாய்மொழி வழியாக புகார் அளித்தார். மறுநாளும் வகுப்புக்கு சென்ற போது, மாணவர்கள் மீண்டும் அய்யப்ப மந்திரங்களை கூறினர்.
தொடர்ந்து பிந்து, முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதனையடுத்து, மாணவர்களை அழைத்த முதல்வர், அவர்களுடன் பேசினார். ஊழியர்களும் மாணவர்களுடன் பேசி பிரச்னையை தீர்த்து வைத்தனர்.