அக்.1 (நேற்று) முதல் இந்த புதிய வசதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை கே.கே.நகர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர், புதிதாக லைசென்ஸ் கோரி விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் செலுத்திய வாகன ஓட்டிகளுக்கு ரசீது வழங்கினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் தான் டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில், விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் லைசென்ஸ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிடும்.
கல்லூரிகளில் ‘சாலை பாதுகாப்பு கிளப்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்டுள்ள புதிய பஸ்கள் படிபடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அடுத்த வாரம் 477 புதிய பஸ்களை முதல்வர் அறிமுகப்படுத்துவார்.
பேட்டரியில் இயங்க கூடிய 100 மின்சார பஸ்கள் வாங்கப்படும். அதில் 80 பஸ்கள் சென்னையிலும், 20 பஸ்கள் கோவையிலும் இயக்க முடிவு செய்துள்ளோம். டீசல் விலை உயர்வு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்.
ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்சில் பயணிக்கும் திட்டம் குறித்து சோதனை நடத்தப்பட்டது. விரைவில், போக்குவரத்து துறை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தை இணைத்து பணமில்லா பரிவத்தனை முறையில் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.