அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 2% இருந்து 3%ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாராட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை ஆராய்ந்து ஊக்கம் அளிப்பது அரசின் கடமை. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 2% இருந்து 3%ஆக உயர்த்தப்படும். என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை. சதா சர்வகாலமும் அவர்களை பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.